91 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்த மத்திய வங்கி குண்டுவெடிப்பு தொடர்பில், 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை போன்று இராணுவ வீரர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, சில விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து தானும் ஒருமுறை சிறையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தண்டனை
சிறையில் உள்ள விடுதலைப் புலிகளை விடுவிப்பதில் எந்தப் பாதிப்பும் இல்லை. அதேபோன்று சில போர் வீரர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தருணத்தில் ஜனாதிபதி, அவர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். அந்த வகையில் வரலாற்றில் இந்த அத்தியாயத்தை முடிக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.