திருகோணமலை மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இல்லாமையினால் மாட்டு பண்ணையாளர்கள் அவதியுற்று வருவதாகக் கூறியுள்ளனர்.
மேலும், திருகோணமலையில் மாடுகளை வளர்ப்பதற்குரிய இடங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதிகளவிலான இடங்கள் வன பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமானவை எனவும் வன இலாகா அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
விவசாயம் செய்யப்படும் காலங்களில் விவசாயிகள் தங்களுடன் முரண்பட்டு வருவதாகவும், காட்டுப் பகுதிக்குள் மாடுகளைக் கொண்டு சென்றால் வன இலாக்கா அதிகாரிகள் முரண் பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேவைகள் நிறைவேற்றப்படவில்லை
இதேநேரம் மாடுகளை மேய்ப்பதற்கு மேய்ச்சல் தரை ஒன்றினை ஒதுக்கித் தருமாறு பல தடவைகள் அரச அதிகாரிகளிடம் கேட்டபோதும் தமக்குரிய தேவைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் மாட்டுப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் மாடுகளை வளர்ப்பதற்குச் சிறந்த இடத்தினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
