கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கைப் பிரஜைகளை பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இவர்கள் UU 0050 என்ற விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் 21 - 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரீயூனியன் தீவிற்கு மக்கள் சட்டவிரோதமாக நுழைவதை பிரெஞ்சு அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், அத்தகைய நபர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடல் வழியாக மனித கடத்தல்காரர்களால் திட்டமிடப்பட்ட சட்டவிரோத குடியேற்றங்களில் ஈடுபடுவதையோ அல்லது அதற்கு ஆதரவளிப்பதையோ தவிர்க்குமாறு இலங்கை கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.