யாழ்ப்பான மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பருத்தித்துறையில் அதிகளவாக 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்தோடு பெய்து வரும் மழை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இன்று (19) காலை 10 மணி வரையான நிலவரப்படி யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வகையில், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தெல்லிப்பழையில் 142 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் திருநெல்வேலியில் 43 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.