மூன்றாவது மாதத்திலும் 2 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

keerthi
0

 



இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்சியாக மூன்றாவது மாதமாகவும் பெப்ரவரியில் 2 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன் மூலம் இலங்கை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக தன்னை நிலை நிறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பெப்ரவரி மாதத்தில் 218,350 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் (SLTDA) வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் காட்டுகின்றது.

2023ஆம் ஆண்டின் இந்த காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, வருடாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 102.8 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 29ஆம் திகதி வரை மொத்தமாக 426, 603 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 210, 352 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளதுடன் ஜனவரி மாதம் 208, 253 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், இலங்கை சுற்றுலாத்துறைக்கு 2024 ஆம் ஆண்டின் இரண்டு அற்புதமான மாதங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஆயினும், பெப்ரவரி மாதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தவறவிடப்பட்டுள்ளது. 220,091 என்ற குறைந்த சூழ்நிலை எதிர்பார்ப்பு, மற்றும் 238,614 இன் மேல் சூழ்நிலை ஆகிய இரண்டிலும் வருகை எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.

பெப்ரவரி மாதத்திற்கான வாராந்த சுற்றுலா பயணிகளின் வருகை சராசரியாக 54,500 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, நாளாந்த வருகை சராசரியாக 7,500 ஆக காணப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் முதல் முறையாக பெப்ரவரி 24 ஆம் திகதி அன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டிற்கு பெப்ரவரி மாதம் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 15 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 14 சதவீதத்தைக் கொண்டுள்ளதுடன்  மொத்த வருகையில் 9 சதவீதத்தை ஐக்கிய இராச்சியம் கொண்டுள்ளது.

ஏனைய இடங்களில் ஜேர்மனி, சீனா, பிரான்ஸ், போலந்து, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.


சுற்றுலாத் துறையானது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க ஆர்வமாக இருக்கும் அதே வேளையில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் ஒரு பகுதியினர் வணிகத்தில் ஈடுபடுவது, பெரும்பாலும் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும்     இது பங்குதாரர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top