சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறலாகாது.- ஜனாதிபதி சுட்டிக்காட்டு

keerthi
0

 


போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடமிருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை மீறல் என சிலர் சுட்டிக்காட்ட முயன்றனர். இருந்தபோதும் , அந்த நடவடிக்கையை அன்று எடுக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பியிருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிதுள்ளார். 

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

 எனினும்   குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடினமான மற்றும் விரும்பத்தகாத யுகத்தின் பின்னர் ஒரு நாடாக முன்னோக்கி செல்லும் பயணத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, ஒவ்வொரு துறையிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்

மேலும் , நாட்டுக்கு புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு பரீட்சை சுமையை குறைத்து பாடசாலை கல்வியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பல்கலைக்கழக கட்டமைப்பில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றத்தின் கீழ் அந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் ஆதரவு தேவை எனத் தெரிவித்த ஜனாதிபதி, 2035ஆம் ஆண்டளவில் நாட்டில் உயர் தரத்திலான கல்வி முறையை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளதுடன் .

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு பல்கலைக்கழக கட்டமைப்பில் நல்லதொரு சூழல் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல்கலைக்கழக நிர்வாகத்தை வெளித் தரப்பினருக்கு வழங்குவதா அல்லது மாற்றங்களை மேற்கொண்டு பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிய சூழலை உருவாக்க வேண்டுமா என்பதை பல்கலைக்கழகங்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அண்மையில் களனி பல்கலைக்கழக திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற தான் தவறவில்லை என்பதை ஜனாதிபதி நினைவு கூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top