வடபகுதி பிரதேச வைத்தியசாலைகளின் பௌதிக வளங்களை மேம்படுத்துவது அவசியம்..!!

tubetamil
0

 வடக்கில் பிரதேச வைத்தியசாலைகளில் பௌதிக வளங்களை மேம்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய நோயாளர் விடுதி கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் தலைமையில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நோயாளர்களை அதிகரித்து சுகாதாரத் துறையை வீழ்ச்சியடைய செய்ய தான் ஒருபோதும் விரும்பவில்லை. தற்கால உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

கிராமிய, பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை வடக்கு மாகாணத்தில் காணப்படுகிறது.

மேலும் இளவாலை கிராமத்திற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பும் எனக்கு உள்ளது.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

அத்துடன் இளவாலை கிராம அபிவிருத்திக்காக செயற்படும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள், அதிகாரிகள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top