ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய தேசிய ஜனசபையை நிறுவுதல் தொடர்பான செயலமர்வு வவுனியாவில் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த செயலமர்வானது, நேற்று வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கிராம மட்டத்தில் நிலை பேண் அபிவிருத்தியை, மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கும் பொருட்டு ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் ஜன சபையை நிறுவுதல் தொடர்பான முன்னோடி செயற்றிட்டத்தை தேசிய ஜனசபை செயலகம் முன்னெடுத்துள்ளது.
இதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர், யுவதிகளுக்கு ஜன சபை தொடர்பாக தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வவுனியா மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி. முகுந்தன் மற்றும் கணக்காளர் கே.சிவதர்சன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு தெளிபடுத்தியிருந்தனர்.
அத்துடன், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம மட்ட அமைப்புக்களுக்கு தெளிவுபடுத்தும் செயற்றிட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.