யாழ் மாவட்டத்தில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு அரசாங்க செலவில் சமைத்த உணவுகளை வழங்குமாறு யாழ்.அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
சாவகச்சேரியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் நேற்று (01) பல்வேறு நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இதுவரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும், தனிநபர்களாலும் உணவுகள் வழங்கப்பட்டதனை கேட்டறிந்த அரசாங்க அதிபர், இன்றிலிருந்து அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் 03 தினங்களுக்கு சமைத்த உணவு வழங்குமாறு சாவகச்சேரி பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்லாமை குறிப்பிடத்தக்கது.