டிட்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும்
மேலும் தெரிவிக்கையில், டிட்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும். அவ்வாறு வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கும், ஒரு கோடி ரூபா நிதியை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும்.
எனினும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, காணி கொள்வனவு மற்றும், வீடமைப்பு பணிகளைக் குறித்த பயனாளர் முன்னெடுக்க வேண்டும். இந்த நடைமுறைகள் தொடர்பான இற்றைப்படுத்தப்படும் தரவுகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், பயனாளி தனக்கான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வீடமைப்பு நடவடிக்கை
இந்த நிலையில் அரசாங்கத்தினால் 2026ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட வீடமைப்பு திட்டமும், பேரிடருக்குப் பின் முன்னெடுக்கப்படத் திட்டமிடப்பட்ட வீடமைப்பு நடவடிக்கையும் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பேரிடரினால் வீடுகளை இழந்தவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தகவல்கள் உரிய முறையில்
வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளுக்கு அமைய வீடமைப்பு தொடர்பான தீர்மானங்கள் இறுதிப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
