வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Editor
0

 வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் (ALFEA) தெரிவித்துள்ளது.


கடந்த அரசாங்கங்களின் அரசியல்வாதிகள் மேற்கொண்ட மோசடிகள் மற்றும் தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் என சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.


கடந்த காலங்களில் நடைபெற்ற மோசடி நடைமுறைகளால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் “மங்கலாக” மாறியுள்ளதாக சங்கத்தின் உறுப்பினர் முகமது அசாம் தெரிவித்துள்ளார்.


இதனால் பலர் வெளிநாட்டில் வேலை தேட முன்வராமல் தயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் கொழும்பில் நடைபெற்ற பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கத்தின் அண்மைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த சரிவின் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இருப்பினும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி முறையான வடிவில் கொண்டு வர அடுத்த ஆண்டு அரசுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட சங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அசாம் தெரிவித்துள்ளார்.


சரியான ஒழுங்குமுறைகள் மற்றும் அரசின் ஆதரவு கிடைத்தால், அடுத்த ஆண்டு வெளிநாட்டு பணியாளர்களின் பணப்பரிவர்த்தனைகள் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலராக உயரக்கூடும் என முகமது அசாம் நம்பிக்கை வெளியிட்டார்.


இதேவேளை, இவ்வருடம் இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.


இவர்களில் 1,84,085 பேர் ஆண்கள் எனவும், 1,16,106 பேர் பெண்கள் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல் வெளியிட்டுள்ளது.


மேலும், 1,94,982 பேர் தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதுடன், 1,05,209 பேர் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top