அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பவேண்டிய பெரும் தொகை நிதி தெறைசேரியில் மாயமானது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 625,000 அமெரிக்க டொலர் பணம் தமக்குக் கிடைக்கவில்லை என அமெரிக்க தரப்பு அறிவித்துள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.பி.சத்குமார தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களம் பணத்தைச் செலுத்தியுள்ள போதிலும், அந்த நிதி தமக்குக் கிடைக்கவில்லை என அமெரிக்க அஞ்சல் சேவை தெரிவித்துள்ளது. இது குறித்து மேலதிக விளக்கங்களை திணைக்களம் கோரியுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இது ஒரு 'பிஷிங்' (Phishing) அல்லது இணைய மோசடி நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு விபரங்கள் மாற்றப்பட்டதாக மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்துள்ளது.இருப்பினும், குறித்த வங்கிக் கணக்கு தற்போது செயலிழந்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அத்துடன் அஞ்சல் திணைக்களத்திற்குள் உள்ளக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸவும் இந்த நிதி முறைகேடு குறித்த விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

.jpg)