நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்த இறப்புகளில் சுமார் 83 சதவீதம்
தொற்றா நோய்களால் நாட்டில் ஏற்படும் மொத்த இறப்புகளில் சுமார் 83 சதவீதம் இடம்பெறுகின்றன.
அவற்றில் 13 சதவீதம் அகால மரணங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இது நாட்டின் சுகாதார அமைப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்பாக, விபத்துகள் காரணமாக இதுவரை சுமார் 12 இலட்சம் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்தம் சுமார் 35 பேர் விபத்துகளால் உயிரிழப்பதுடன், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக மூன்று பேர் விபத்து காயங்களால் மரணமடைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பண்டிகைக் காலத்தில் அபாயங்களை குறைப்பதற்காக, பொதுமக்கள் சமச்சீரான உணவுகளை உட்கொள்வதுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
