யாழ்ப்பாணம் பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான பாதையை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி முதல் பகுதியளவில் விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.
35 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் வழிபாட்டிற்காக விடுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மாதத்தின் சில நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வழிபட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பின்னர் தடையின்றி வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், ஆலயத்திற்கான பிரதான பாதை இதுவரை விடுவிக்கப்படாததால், தனியார் காணிகள் மற்றும் மற்றுமொரு ஆலயக் காணி ஊடாக அமைக்கப்பட்ட தற்காலிகப் பாதையையே பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஆலயத்திற்கான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடுவிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஆலயப் பாதையை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூலை 10 முதல் தினமும் இரவு 10 மணி வரை பொதுமக்கள் இந்தப் பாதையை பயன்படுத்த அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
