இலங்கையில் பிறந்தவரும் பிரித்தானியாவின் லெஸ்டர் பல்கலைக்கழக துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா, உயர் கல்வித் துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக பிரித்தானிய மன்னரால் ‘நைட்’ (Knighthood) பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வின்ட்சர் மாளிகையில் நேற்று (07) நடைபெற்ற உத்தியோகபூர்வ கௌரவிப்பு விழாவில், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ், பாரம்பரிய முறைப்படி பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் தோள்களில் வாளினால் தொட்டு ‘நைட்’ பட்டத்தை வழங்கினார்.
உயர் கல்வித் துறையில், குறிப்பாக கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது.
1966 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜா, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
அவரது தந்தை கனகராஜா, சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவும், தாயார் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகவும் பணியாற்றியுள்ளனர்.
1985 ஆம் ஆண்டு கணிதப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்ற அவர், பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்.
அங்கு 1989 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டத்தையும், 1993 ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டத்தையும் நிறைவு செய்தார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 முதல் பிரித்தானியாவின் லெஸ்டர் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி வரும் பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் இந்த உயரிய சாதனை, யாழ்ப்பாணத்திற்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளது. 

