களுபோவில போதனா வைத்தியசாலையில், பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்கு அந்த வைத்தியசாலையின் ஆவணங்களை பரிசோதிக்குமாறு சுகாதார அமைச்சு உத்தரவு போட்டுள்ளது.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கெஸ்பேவ - ஹொன்னந்தர பகுதியைச் சேர்ந்த பெண்னொருவர் கடந்த 8ம் திகதி பிரசவத்திற்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 9ம் திகதி இரட்டைக் குழந்தைகளை பிரசவித்திருந்தார்.
எனினும் குறித்த இரட்டைக் குழந்தைகளும் குறைந்த நிறையுடன் பிறந்துள்ளதாக கூறி, குறைமாத குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தன.
இதனையடுத்து, அதில் சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை கடந்த 18ம் திகதி உயிரிழந்துள்ளது.
அந்த ஆண் குழந்தையின் உடலில் நுண்ணங்கிகளின் தாக்கம் காரணமாக இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரிகளால் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் மூச்சு திணறல் காரணமாக அந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் மற்றைய குழந்தையும் உயிரிழந்தமை தெரியவந்திருந்தது.
எனினும், களுபோவில வைத்தியசாலையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குறித்த இரட்டைக் குழந்தைகளின் உறவினர்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறுஇருக்கையில், வைத்தியசாலை அதிகாரிகளின் கவனயீனமே குறித்த இரட்டைக் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த விடயத்தை கருத்திற் கொண்டு, விசேட விசாரணைகள் முன்னெக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.