கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட மாவத்துர கலைமகள் தமிழ் வித்தியாலய பாடசாலை மைதானத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் சிறு காயமடைந்த மூன்று மாணவர்கள் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஒரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாடசாலை நேரத்தில் மூன்று மாணவர்களும் வெளியே சென்ற போது, பந்து போன்ற ஒன்றைப் பார்த்து மாணவர் ஒருவர் அதனை உதைத்த போது அந்த பொருள் திடீரென வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தால் மாணவனின் காலணி ஒன்று உடைந்ததுடன், அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் வெடிபொருள் ஒன்றே வெடித்து சிதறியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்று பிற்பகல் 01:35 அளவில் பாடசாலையினால் தனக்கு வழங்கப்பட்ட தொலைபேசி அழைப்பின் பிரகாரம், குறித்த இடத்திற்கு சென்ற போது பாடசாலையில் கரும் புகை சூழ்ந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
அத்தோடு இது குறித்து பாடசாலை அதிபரிடம் வினவிய போது, வெடி விபத்து குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என காவல்துறையினர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக கம்பளை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.நிஹால் அழககோனிடம் வினவ முயன்றபோதும் அது பயனளிக்கவில்லை
மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்,