பாடசாலை, உயர்கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு பயண பருவச்சீட்டினை வழங்குவதற்கு ரூபா 10,500 மில்லியன் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (13.11.2023) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் கீழ் 487,000 பாடசாலை மாணவர்களுக்கும் 7,000 உயல்கல்வி மாணவர்களுக்கும் 31,000 தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கும் நிவாரணங்கள் கிடைக்கின்றன என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, கிராமியப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கும் பொருளாதார ரீதியில் இலாபமற்ற பயணவழிகளில் இலங்கைப் போக்குவரத்து சபையின் பேருந்துகளைச் செலுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார்.
இவ்வாறுஇருக்கையில், அரசாங்கத்தினால் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு ரூபா 2,000 மில்லியன்களும், சிசுசெரிய, கெமிசெரிய, மற்றும் நிசிசெரிய ஆகிய பேருந்துச் சேவைகளை நடாத்திச் செல்வதற்காக ரூபா 2,000 மில்லியன்களும் 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஏற்பாடு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
