ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நீர் போசன பிரதேசங்களுக்கு தொடர் மழை பெய்து வருகிறது நேற்று (16) முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளன.
இதனை தொடர்ந்து காசல்ரி நேர்த்தேக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதி நவீன நீர் தடுப்பு தொழிநுட்ப பலூன்களுக்கு மேலாக நேற்று (16) திகதி இரவு முதல் நீர் வான் பாய்ந்து வருகின்றன.
இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்தேக்கத்திற்கு பொருப்பான பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மவுசாக்கலை, கெனியோன், விமலசுரேந்திர, லக்ஸபான, நவலக்ஸபான, பொல்பிட்டிய, மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளன. இதனால் எந்த வேளையிலும் இந்த நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படலாம் என்பதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன இதனால் மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
மத்திய மலை நாட்டில் சரிவு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களுக்கு நீர் போதியளவு கிடைத்து வருவதனால் நீர் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதுடன் நீர் மின் உற்பத்தி உச்ச அளவில் நடைபெற்று வருவதாக மின்சார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே நேரம் தொடர்ச்சியாக சில பிரதேசங்களுக்கு அடை மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.