கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு பிரதானி வைத்திய நிபுணர் கிரிஷாந்த பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி சுகாதார தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தத்தின் போது கனிஷ்ட ஊழியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு பிரதானி வைத்திய நிபுணர் கிரிஷாந்த பெரேரா இன்று (22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், மாரடைப்பு காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதித்ததுடன், இன்று அவர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சமர்ப்பணங்களை பரிசீலித்த காலி பிரதான நீதவான் இசுரு நெத்திகுமார, வைத்தியர் கிரிஷாந்த பெரேராவை தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, வைத்தியசாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் காலி பொலிஸாரால் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் இருவரையும் பணிப்பெண் ஒருவரையும் நேற்று முன்தினம் கைது செய்ததுடன், அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.