காசாவில் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீதான இஸ்ரேலின் மற்றொரு தாக்குதலில் 25 பேர் பலி..!!

tubetamil
0

 காசா நகரில் உதவிக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கானவர்கள் மீது இஸ்ரேலிய துருப்புகள் மீண்டும் ஒருமுறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் போர் தொடரும் நிலையில் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய முன்மொழிவை மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பித்துள்ளது.

காசா நகரில் குவைட் சுற்றுவட்டப்பாதையில் உதவிப் பொருட்களுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையிலேயே கடந்த வியாழக்கிழமை (14) மாலை இஸ்ரேலிய துருப்புகள் அவர்களின் மீது நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.


இதே பகுதியில் சில மணி நேரங்களுக்கு முன்னரும் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்ட நிலையிலேயே புதிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதனை ‘முன் திட்டமிடப்பட்ட படுகொலை’ என்று காசா சுகாதார அமைச்சு வர்ணித்துள்ளது.

காசாவில் உதவிகள் செல்வதை முடக்கி இருக்கும் இஸ்ரேல், அங்கு உணவுக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.

உணவு லொறியின் வருகைக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய படைகள் ஹெலிகொப்டர்கள், டாங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கூட்டத்தின் மீது நேரடியாக சூடு நடத்தியதாக கூறுவதை இஸ்ரேலிய இராணுவம் மறுத்துள்ளது.

‘மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கும் இடம் ஒன்றில் வியாழக்கிழமை மாலை பல டஜன் காசா மக்கள் இலக்கு வைக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி சரியானதல்ல’ என்று அரபு ஊடகத்திற்கான இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் அவிசாய் அட்ராயி, எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவிசாய் கூறியுள்ளார்.

காசா நகரில் குவைட் சுற்றுவட்டப்பாதையில் மக்கள் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்காகி இருப்பாக வடக்கு காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளரான முஹமது குராப் குறிப்பிட்டுள்ளார்.

உணவு லொறி ஒன்றுக்காக காத்திருந்த மக்கள் மீது ‘ஆக்கிரமிப்பு படை நேரடியாக சூடு நடத்தியுள்ளது’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

பலரும் சுடப்பட்ட நிலையில் இருப்பதை கண்டதாக அங்கிருக்கும் ஏ.எப்.பி. செய்தியாளரும் விபரித்துள்ளார்.

காசா போர் தற்போது ஆறு மாதங்களை தொட்டிருப்பதோடு அங்குள்ள மக்கள் தொகையில் கால் பங்கினராக குறைந்தது 576,000 பேர் பஞ்சத்தின் விளிம்பை தொட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிடுள்ளது. காசாவுக்கு மேலும் உதவிகளை அனுமதிக்குமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

காசா எல்லைக் கடவைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்ரேல், போர் வெடித்தது தொடக்கம் ஒரே ஒரு வாயிலை மாத்திரம் திறந்து வைத்துள்ளது. அங்கு கடுமையான சோதனைகள் மற்றும் கெடுபிடிகளுக்கு பின்னரே உதவி வாகனங்கள் காசாவுக்குள் நுழைய முடியுமாக இருப்பதாக ஐ.நா நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில் கடல் வழியாக உதவிகளை விநியோகிப்பதற்கு சைப்ரஸில் இருந்து முதலாவது உதவிக் கப்பல் ஒன்று காசாவை நோக்கி பயணித்திருப்பதோடு காசாவில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் வானில் இருந்து காசாவுக்கு உணவு உதவிகளை போட்டு வருகின்றன.

எவ்வாறாயினும் தரை வழியான உதவி விநியோகமே செயல்திறன் மிக்கதாகவும் பொருத்தமானதாகவும் இருப்பதாக தொண்டு அமைப்புகள் கூறுகின்றன.

கடந்த மாதம் தென்மேற்கு காசா நகரில் ரஷீட் வீதியில் உணவு உதவிக்காக கூடிய பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 118 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இதேவேளை 200 தொன் உணவு உதவியுடன் காசா பயணித்திருக்கும் உதவிக் கப்பல் தற்போது காசா கடற்கரை தெரியும் தூரத்தை எட்டி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஸ்பெயின் தொண்டு நிறுவனமான ஓபன் ஆர்ம் அமைப்பின் இந்தக் கப்பல் அரிசி, மாவு, பருப்பு வகைகள், பொதியிடப்பட்ட உணவுகளை நிரப்பியவாறே காசா பயணித்துள்ளது.

காசாவில் துறைமுகக் கட்டமைப்பு ஒன்று இல்லாத சூழலில் அங்கு இறங்கு துறை ஒன்றை அமைப்பதற்கும் இந்த கப்பல் பயணித்துக்கான ஏற்பாடுகளை செய்த அமெரிக்க தொண்டு நிறுவனமான ‘வேர்லட்; சென்ட்ரல் கிச்சன்’ அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

காசாவில் இடைவிடாது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,500ஐ நெருங்கி இருப்பதோடு மேலும் 71 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

புதிய முன்மொழிவு

இந்நிலையில் ஆயுள் தண்டனைக்கு முகம்கொடுத்திருக்கும் 100 பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது உட்பட போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றை ஹமாஸ் அமைப்பு மத்தியஸ்தர்கள் மற்றும் அமெரிக்காவிடம் வழங்கியுள்ளது.

இஸ்ரேலிய சிறையில் இருக்கும் 700–1000 பலஸ்தீனர்களை விடுவிப்பதற்கு பகரமாக ஆரம்பத்தில் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் நோயுற்ற இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஹமாஸ் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பெண் வீராங்கனைகளும் உள்ளடங்குகின்றனர்.

மத்தியஸ்தர்களுக்கு ஹமாஸ் முன்வைத்திருக்கும் புதிய போர் நிறுத்த முன்மொழிவு தொடர்ந்து ‘யதார்த்தமற்ற கோரிக்கைகளை’ அடிப்படையாகக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பிலான விடயம் போர் அமைச்சரவைக்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சரவைக்கு நேற்று கையளிக்கப்பட்டதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வரும் சூழலில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான வேறுபாடுகளை கலையும் முயற்சியில் மத்தியஸ்தத்தில் எகிப்து மற்றும் கட்டார் ஈடுபட்டு வருகிறது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும், அந்தப் பகுதிக்கு உதவிகளை விரைவுபடுத்துவதற்கும், தெற்கு மற்றும் மத்திய காசாவில் இடம்பெயர்ந்திருக்கும் பலஸ்தீனர்களை வடக்கிற்கு செல்வதற்கு அனுமதிப்பதற்கும் எகிப்து முயற்சித்து வருகிறது என்று அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

‘காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது தொடர்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், போர் நிறுத்தம் ஒன்றின் மூலம் பெரும் அளவான உதவிகளை வழங்க முடியும்’ என்று எகிப்து பொலிஸ் கல்லூரியில் பேசிய சிசி கூறினார்.

எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபா பகுதி மீது இஸ்ரேல் திட்டமிட்டிருக்கும் போர் நடவடிக்கையின் ஆபத்துக் குறித்து சிசி மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்தார்.

ராபவில் இருக்கும் நான்கு படைப்பிரிவுகளையும் அழிக்க அங்கு படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பது குறித்து நெதன்யாகு கடந்த பெப்ரவரியில் குறிப்பிட்டிருந்தார்.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான தாக்குதல் பாரிய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் என்று சர்வதேச அளவில் கவலை வெளியிடப்பட்டு வருகிறது.

காசாவில் இஸ்ரேலிய தரைப்படை இன்னும் நுழையாத பகுதியாக ரபா இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவந்து அங்குள்ள இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறப்பட்டு, தெற்கில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் வடக்கிற்கு செல்ல அனுமதிக்கும் வகையில் ஹமாஸ் முன்னதாக போர் நிறுத்தம் முன்மொழிவுகளை செய்தது. எனினும் நெதன்யாகு அதனை நிராகரித்ததன் காரணமாகவே கடந்த சில வாரங்களில் போர் நிறுத்தம் ஒன்றை எட்ட முடியாமல் போயிருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் 40 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பரிந்துரை கடந்த பெப்ரவரியில் பாரிஸ் பேச்சுவார்த்தையின்போது ஹமாஸ் அமைப்புக்கு அளிக்கப்பட்டது. எனினும் அதற்கு ஹமாஸ் முழுமையாக உடன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவிலும் கூட, கைதிகள் பரிமாற்றத்திற்குப் பின்னர் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கான திகதிக்கு இணக்கம் எட்டப்பட வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. அதேபோன்று காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறும் காலக்கெடுவையும் அது கோரியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top