இரணைமடுச்சந்தி கனகாம்பிகைக்குளம் பகுதியில் அடையாளம் தெரியாதவர்களினால் 26 வயது இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாப்பிகைக் குளப்பகுதியில் மாலை 6 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
யாழ்ப்பாணம் புண்ணாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார்.
இந்த நிலையில் வழமை போன்று குறித்த யுவதி பிரயாணித்து தங்கும் இடத்துக்கு திரும்புகையில் வான் ஒன்றில் சென்ற குழுவினர் கட்டாயப்படுத்தி ஏற்றி சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த யுவதியின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் திட்டமிட்டு இடம் பெற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், பூர்வாங்க விசாரணைகள் குற்றத்தடுப்பு பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.