தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படம், திரையரங்குகளைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் சாதனை படைத்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தப் படம், கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து, சின்னத்திரை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘கோட்’ திரைப்படம், திரைக்கு வந்த நாளிலிருந்தே மாபெரும் வரவேற்பை பெற்றது. ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவான இந்தப் படம், உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது.
இந்த வெற்றிப் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கோட்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திரையரங்குகளில் கொண்டாடப்பட்டதைப் போலவே, ஜீ தமிழிலும் இந்தப் படம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
தற்போது வெளியான ரேட்டிங் நிலவரப்படி, ‘கோட்’ திரைப்படத்தின் டெலிவிஷன் பிரீமியர் காட்சி 9.1 TVR புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. சாதாரண தினத்தில் ஒளிபரப்பாகி, கோடிக்கணக்கான தமிழ் மக்களை கவர்ந்த இந்தப் படம், சின்னத்திரை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
‘கோட்’ திரைப்படத்தில் தளபதி விஜயுடன் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நாயகியாக நடிக்க, சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தனர்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் மாபெரும் வெற்றி பெற்ற ‘கோட்’ திரைப்படம், தளபதி விஜய்யின் சக்தியை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த வெற்றி, தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய உத்வேகம் அளித்துள்ளது.