சமீபத்தில் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யோஷித ராஜபக்ச கைது தொடர்பான புகைப்படம் உண்மையில் யார் எடுத்தது என்ற கேள்விக்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட இந்த புகைப்படம் குறித்து காவல்துறை தெரிவித்திருக்கும் விவரங்கள் என்ன என்பதை இந்த செய்தியில் காணலாம்.
இது குறித்து சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியேட்சகர் புத்திக மனதுங்க, சமூக ஊடகங்களில் பரவி வரும் யோஷித ராஜபக்ச கைது தொடர்பான புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு காவல்துறை அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் மேலும், இந்த புகைப்படம் பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டதாகவும், அதை யோஷித ராஜபக்சவின் நண்பர் அல்லது வேறு நபரொருவர் எடுத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்படும் ஒவ்வொரு சந்தேக நபருக்கும் கைவிலங்கு போட வேண்டிய அவசியமில்லை என்றும், சந்தேக நபரின் நடத்தையைப் பொறுத்து, அந்த நேரத்தில் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரியே சந்தேக நபருக்கு கைவிலங்கு போடலாமா வேண்டாமா என்பதை என்பதை தீர்மானிப்பார் எனவும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, காவல்துறை அதிகாரிகள் உரிய நேரத்தில் சரியான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், எந்த விதத்திலும் அரசியல் அதிகாரத்தின் தலையீடு இல்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் கூறியுள்ளார்.