தான் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் விசித்திரமான வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நீதிமன்றத்தால் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருந்தார். குற்றப் புலனாய்வுத் துறையினர் சிறையில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யச் சென்றபோது, அவர் பல்வேறு குழப்பமான தகவல்களை வழங்கியுள்ளார். "நான் முச்சக்கர வண்டியில் ஏறி கிரியுல்லவில் உள்ள வீட்டிற்குச் சென்றேன். முன்பக்க கதவு பூட்டியிருந்ததால், மதில் ஏறி ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்தேன். அந்த வீட்டில்தான் இத்தனை நாட்களாக இருந்தேன். சாப்பிடுவதற்காக அவ்வப்போது வெளியில் சென்றேன். கடைகளில்தான் உணவருந்தினேன். அப்போதுதான் எனக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். உடனே சில ஆடைகளை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் மாத்தறைக்கு வந்தேன். அங்கு தங்க இடமில்லாததால் ஹோட்டலில் தங்கினேன். அடுத்த நாள் நன்கு உடை அணிந்து மாத்தறை நீதிமன்றத்திற்குச் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். ஹோகந்தரையில் இருந்து கிரியுல்லவிற்குச் சென்று தங்கியிருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் எதுவும் எனக்கு நினைவில்லை" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த இதேவேளை தேசபந்து தென்னகோனின் இந்த விசித்திரமான வாக்குமூலம், குற்றப் புலனாய்வுத் துறையினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.