யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து 764ஆம் இலக்க தனியார் பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வீதி விடுவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமிர்தலிங்கம், பாதை விடுவிப்பு தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். முன்னர் வசாவிளான் வரை மட்டுமே இயங்கி வந்த தமது பேருந்து சேவை, இனிமேல் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) வரை நீட்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், அதே வழித்தடத்தில் யாழ்ப்பாணம் வரை இந்த பேருந்து சேவை மீண்டும் இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய பயண அட்டவணை படிப்படியாக தீர்மானிக்கப்படும் என்றும், பாதை மூடப்படுவதற்கு முன்பு காங்கேசன்துறை சந்தியில் இருந்து இயங்கியது போலவே மீண்டும் சேவைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
குறிப்பாக, அன்ரனிபுரம் மற்றும் மயிலிட்டி பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை காங்கேசன்துறை வரையிலான பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுவது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக இப்பகுதி மக்கள் எதிர்நோக்கியிருந்த போக்குவரத்து சிரமத்திற்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் முழுமையான சேவை அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் அதுவரை காத்திருக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.