கோவை மாவட்டம் கிணத்துக்கடவில், மாதவிடாய் அடைந்த காரணத்தால் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் தற்போது பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 5-ம் தேதி பூப்படைந்துள்ளார். அவர் முழு ஆண்டுத் தேர்வு எழுதியபோது, பள்ளி நிர்வாகம் மாதவிடாயை காரணம் காட்டி வகுப்பறையை பூட்டிவிட்டு மாணவியை வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளது. இந்த கொடூர செயலை அறிந்த மாணவியின் தாய், உடனடியாக பள்ளிக்கு சென்று நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்துள்ளதுடன், "எங்கள் பள்ளியில் இப்படித்தான் நடக்கும். பிடிக்கவில்லை என்றால் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறியதாக தெரிகிறது. பள்ளி நிர்வாகத்தின் இந்த மனிதநேயமற்ற செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி மற்றும் பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறையும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் இதுகுறித்து கூறுகையில், பள்ளியிடமும் மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், தவறு உறுதியானால் விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
தற்போது, கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி இயக்குநர் வடிவேல் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவியிடமும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஒரு மாணவியை மாதவிடாய் காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.