அதிக வேகத்தில் சென்ற முச்சக்கரவண்டி காட்டுப்பன்றியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்திக்கு சமீபமாக நேற்று(16.12.2025) இரவு சுமார் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கினகத்தேனை பகுதியிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி பயணம் செய்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி அதிக வேகத்தில் பயணம் செய்துள்ளதாகவும் அதனால் வீதியின் குறுக்கே ஓடிய பன்றியின் மீது மோதியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களை பொலிஸார் மற்றும் வீதியில் பயணித்தவர்கள் இணைந்து வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
