இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Editor
0

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மின்சார விநியோகத்தில் சுமார் 86வீதம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

73 இலட்சத்திற்கும் அதிகமான மின் பாவனையாளர்களில் சுமார் 39 இலட்சம் பேருக்கு சீரற்ற வானிலையின் தாக்கத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார


மின்சார விநியோக கட்டமைப்பு

மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக மின்சார சபை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக மிகுந்த முயற்சியுடன் செயற்பட்டதாக பிரதிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, விரைவில் மின்சார விநியோக கட்டமைப்பை முழுமையாக வழமைக்கு கொண்டுவர முடியும் என நோயல் பிரியந்த குறிப்பிட்டார்.

இதேவேளை செயலிழந்த 156 நீர் வழங்கல் திட்டங்களில் 146 திட்டங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், மீதமுள்ள 10 திட்டங்களை சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

நாடு முழுவதும் நீர் வழங்கல் திட்டங்கள்

நாடு முழுவதும் இயங்கும் 342 நீர் வழங்கல் திட்டங்களில், அனைத்து மாவட்டங்களையும் பாதிக்கும் வகையில் செயலிழந்த 156 திட்டங்களில், 17 திட்டங்கள் சீரற்ற வானிலை காரணமாக முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், மிகவும் கடினமாக மீளமைக்கப்பட வேண்டிய இந்த சிக்கலான நீர் வழங்கல் திட்டங்களை சில நாட்களுக்குள் வழமைக்கு கொண்டு வருவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு பாதுகாப்புப் படையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை மின்சார சபை வழங்கிய ஒத்துழைப்பை அவர் பாராட்டியுள்ளார்.

அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்ட மத்திய மாகாணம் உட்பட நாடு முழுவதும் நீர் வழங்கல் திட்டங்களுக்கு ஏற்பட்ட சேதம் 5 பில்லியன் ரூபாயைத் தாண்டும் என ஊகிக்கப்படுவதாக, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு வாரத்திற்குள் அனைத்து நீர் வழங்கல் திட்டங்களும் வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top