IMF தலைவர் இலங்கை மத்திய வங்கியில் முக்கிய சந்திப்பு !!

Author
0

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (17) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.இலங்கை சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினராகி 75 ஆண்டுகள் நிறைவடைவதையும், இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவையும் ஒட்டியே இந்த விஜயம் அமைந்தது.

மத்திய வங்கி வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, கலாநிதி ஜோர்ஜீயேவா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்தார்.

தற்போதைய நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் வழங்கப்பட்ட உறுதியான ஆதரவிற்கும், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு உதவும் வகையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்ய தீவிரமாக ஒத்துழைத்தமைக்கும் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினருக்கு ஆளுநர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும், நாணயக் கொள்கை மற்றும், பேரண்ட பகுப்பாய்வு மற்றும் நிதித்துறை கொள்கைகள் உள்ளிட்ட பல துறைகளில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய விரிவான தொழில்நுட்ப உதவிகளுக்கும் கலாநிதி நந்தலால் வீரசிங்க நன்றியைத் தெரிவித்தார்.

தற்போதைய சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்பாடுகளை ஒரு வெற்றிக் கதையாக கலாநிதி ஜோர்ஜீயேவா அங்கீகரித்தார்.

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் இலங்கை மத்திய வங்கியின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

சமீபத்திய ஆண்டுகளில் இலங்கை தொடர்ச்சியான பின்னடைவுகளை எதிர்கொண்ட போதிலும், தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால், நாடு உயர்ந்த வளர்ச்சியை எட்டத் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top