காப்பாற்றப் போய் சிக்கிய இலங்கை: ஈரானிய மாலுமிகள் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும் அழுத்தம் - அமைச்சர் விஜித ஹேரத்திடம் ஈரான் அவசரப் பேச்சு!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழல், தற்போது இலங்கை வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. நடுக்கடலில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானியக் கப்பலிலிருந்து மாலுமிகளை மீட்ட விவகாரத்தில், இலங்கைக்கு அமெரிக்கா பாரிய இராஜதந்திர அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மனிதாபிமான உதவியும் ஈரானின் நன்றியும்
கடந்த மார்ச் 4-ஆம் திகதி அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) தாக்குதலில் ஈரானின் 'டேனா' (Dena) என்ற கப்பல் முற்றாகத் தகர்க்கப்பட்டது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட 84 மாலுமிகளின் சடலங்களை மீட்பதற்கும், காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்கும் இலங்கை கடற்படை பாரிய உதவிகளை வழங்கியது. இந்த மனிதாபிமான நடவடிக்கைக்காக ஈரானிய வெளியுறவு அமைச்சர் செய்யத் அப்பாஸ் அராக்சி, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தைத் தொலைபேசியில் அழைத்துத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கடும் அழுத்தம்
இலங்கையின் இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு ஈரான் பாராட்டுத் தெரிவித்தாலும், அமெரிக்கா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச இராஜதந்திர வட்டாரங்கள் கசியவிட்டுள்ள தகவல்களின்படி, இலங்கையினால் காப்பாற்றப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானிய மாலுமிகளை மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது. குறித்த மாலுமிகளிடம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால், அவர்களைத் தடுத்து வைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருவது இலங்கையை இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.
