"செய் அல்லது செத்து மடி": அரபு நாடுகளைக் குறிவைத்து ஈரானின் 'குழப்ப உத்தி' - லண்டன் பாதுகாப்பு நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
மத்திய கிழக்கில் நிலவி வரும் உக்கிரமான போர்ச் சூழலில், ஈரான் தனது 'மூலோபாயப் பொறுமை' (Strategic Patience) என்ற பழைய அணுகுமுறையைக் கைவிட்டு, தற்போது "செய் அல்லது செத்து மடி" (Do-or-Die) என்ற இறுதி வியூகத்தைக் கையில் எடுத்துள்ளதாக சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிபுணர் ரொப் பின்ஃபோல்ட் (Rob Geist Pinfold) தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா (Al Jazeera) ஊடகத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இந்த அதிர்ச்சியான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை முடக்கும் 'குழப்ப உத்தி' (Chaos Strategy)
ஈரான் தற்போது அமெரிக்க இராணுவத் தளங்களை மாத்திரமன்றி, வளைகுடா நாடுகளின் (GCC) பிரதான உள்கட்டமைப்புகள் மற்றும் சிவிலியன் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இது எதேச்சையாக நடக்கும் ஒன்றல்ல, மாறாக இது ஈரானின் மிகத் துல்லியமானதொரு தந்திரோபாயம் என லண்டன் கிங்ஸ் கல்லூரியின் விரிவுரையாளரான ரொப் பின்ஃபோல்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
முழுப் பிராந்தியத்திலும் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தி, உலகப் பொருளாதாரத்தை முடக்குவதன் ஊடாக அமெரிக்காவிற்குப் பொருளாதார ரீதியான அழுத்தத்தைக் கொடுப்பதே ஈரானின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம், இந்தப் போர் தமக்கு நட்டத்தை ஏற்படுத்துவதை உணரும் அமெரிக்கா, தாமகவே முன்வந்து போர் நிறுத்தத்தைக் (Ceasefire) கோரும்படி நிர்ப்பந்திப்பதே ஈரானின் தற்போதைய திட்டமாகும்.ஓயாத ட்ரோன்களும் 'ஸ்லீப்பர் செல்' அச்சுறுத்தலும்
ஈரானிடம் பாரிய ஏவுகணைகள் தீர்ந்துபோனாலும், மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் 'ஷாஹெட்' (Shahed) ட்ரோன்கள் மூலம் உலகப் பங்குச்சந்தைகளையும், அண்டை நாடுகளையும் தொடர்ச்சியாகப் பதற்றத்தில் வைத்திருக்க முடியும் என அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், லண்டன் மற்றும் பகுரைன் போன்ற பகுதிகளில் ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையானது, வெளிநாடுகளுக்குள்ளும் ஊடுருவிக் குழப்பங்களை ஏற்படுத்தும் ஈரானின் 'ஸ்லீப்பர் செல்' (Sleeper cells) நடவடிக்கைகளை உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்கா - இஸ்ரேல் இடையே பாரிய விரிசல்
இந்த யுத்தத்தின் இறுதி இலக்குத் தொடர்பில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது பாரிய விரிசல் (Divergence) தோன்றியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் ஈரானில் ஒரு 'ஆட்சி மாற்றத்தை' (Regime change) மாத்திரமே எதிர்பார்க்கும் நிலையில், இஸ்ரேலோ ஈரானின் முற்றுமுழுதான வீழ்ச்சியையும், முடிவற்றதொரு குழப்ப நிலையையுமே (Regime collapse and indefinite chaos) விரும்புவதாக அவர் ஆழமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த முரண்பாடானது எதிர்வரும் நாட்களில் போரின் போக்கில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Tubetamil24X7 #IranWar2026 #DoOrDie #ChaosStrategy #GlobalEconomy #BreakingNewsTamil #JaffnaNews #MiddleEastCrisis #USvsIran
