விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(08.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
43 வயது நபர் கைது
சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல வீடுகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்கவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 43 வயதுடைய தோடம்பழம் சுயேட்சைக் குழுவின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராக செயல்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனை நடவடிக்கைகளில் மீட்கப்பட்ட பொருட்கள்
அத்துடன், இலத்திரனியல் தராசு, 2 கைப்பேசிகள், ஒரு தொகை பணம் மற்றும் கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் அனைத்தும் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (09.04.2026) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
