கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்தால் ஏற்படும் சிக்கல்.. உடனடியாக இதைச் செய்யுங்கள்!

Author
0

 இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போவது மற்றும் திருடப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் பதிவாகி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு எச்சரித்துள்ளது.

இவ்வாறு தவறிப்போகும் தொலைபேசிகள் சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட மற்றும் நிதித் தரவுகள் காரணமாக அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் தேவையற்ற சட்டச் சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, தொலைபேசி தொலைந்தவுடனேயே சம்பந்தப்பட்ட சேவை வழங்குநர் மூலம் அதன் SIM அட்டையை முடக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உடன் அணுகுங்கள்..

அத்துடன், முறைப்பாடு செய்யும் போது தொலைபேசியின் தனித்துவமான IMEI இலக்கத்தை வழங்குவது அவசியமாகும்.

பொதுமக்கள் தமது தொலைபேசிகளில் *#06# ஐ டயல் செய்வதன் மூலம் இந்த IMEI இலக்கத்தை முன்னரே குறித்து வைத்துக்கொள்ளுமாறும், பொலிஸாரின் “I Need” (ineed.police.lk) என்ற இணையத்தளத்தில் சாதனத்தின் விபரங்களைப் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


இதன் மூலம் கடந்த 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் காணாமல் போன 2,796 தொலைபேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட 928 தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டில் இதுவரை 2,355 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 1,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருடப்பட்ட சொத்துக்களை தெரிந்தே வாங்குவது அல்லது வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதுடன், இதற்காக தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இதனால், புதிய அல்லது பாவிக்கப்பட்ட தொலைபேசிகளை வாங்குவதற்கு முன்னர், “I Need” தளத்திலுள்ள “Find Genuine Phone” வசதியைப் பயன்படுத்தி அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top