முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலரின் உதவியை தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக இவ்வாறு உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடட்மொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
கடந்த சில வாரங்களாக திரைமறைவில் இடம்பெற்று வரும் அரசியல் நகர்வுகள் குறித்து தனக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை ஓரளவாவது நிலைநிறுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க ஆகியோரின் உதவிகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடியுள்ளதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்துடன் இணைவாரா என்பது தனக்குத் தெரியாது எனவும், அவர் திறமையான ஒரு பொருளாதார நிபுணர் எனவும் தெரிவித்துள்ளார்.
மூழ்கிக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியில் உள்ள எவரும் இந்த நேரத்தில் ஆதரவளிக்கக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை ரூபாயின் வீழ்ச்சி மற்றும் எரிவாயு தட்டுப்பாடு குறித்து இந்த வருட தொடக்கத்திலேயே தான் கணித்துக் கூறியது தற்போது உண்மையாகியுள்ளது என அவர் சுட்டிக்காடடி்யள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை டொலர்களை நாட்டுக்கு அனுப்புமாறு அரசாங்கம் கோரியுள்ளதாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்துள்ளதால் அவர்கள் டொலர்களை அனுப்பப் போவதில்லை என சாமர சம்பத் தசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
