இலங்கைக்கு வடகிழக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

Author
0

 இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் காலநிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு விசேட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

இதேவேளை இன்று (15.05.2026) மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பலத்த மழை

இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையிலான மிக பலத்த மழை பெய்யக்கூடும். அத்தோடு காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.


ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top