மே 11: "ஒரே நாளில் ஈரானை அழிப்போம் என பகிரங்க எச்சரிக்கை!"
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முன்வைத்த நிபந்தனைகளை "முட்டாள்தனமானது" என மிகக் கடுமையாக விமர்சித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் அமெரிக்கக் கடற்படையின் நடவடிக்கையைத் தொடங்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்! 


ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக மீட்கும் 'புராஜெக்ட் ஃப்ரீடம்' நடவடிக்கையை மீண்டும் தொடங்குவது குறித்துத் தான் பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் கடந்த வாரம் தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது குறித்த இறுதி முடிவை அவர் இன்னும் எடுக்கவில்லை.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரான் ராணுவ ரீதியாக முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அவர்களிடம் எஞ்சியிருக்கும் சிறிதளவு படைகளையும் நாங்கள் ஒரே நாளில் அழித்துவிடுவோம். என் திட்டம் மிகவும் எளிமையானது: ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது" எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
அழிக்கப்பட்ட ஈரானிய அணு உலைகளிலிருந்து எஞ்சிய "அணு உலைகளின் தூசுகளை" (nuclear dust) அமெரிக்காதான் மீட்க வேண்டும் என ஈரான் கூறியுள்ள நிலையில், அதற்காக அமெரிக்கப் படைகள் ஈரானுக்குள் எவ்வாறு நுழைவது என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும், அது குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
போர் காரணமாக அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பெடரல் எரிபொருள் வரியைத் (federal gas tax) தற்காலிகமாக ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் 'சிபிஎஸ் நியூஸ்' (CBS News) ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) ஒப்புதல் தேவை என்பதோடு, இதனால் அரசுக்கு வாரத்திற்கு அரை பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் எனச் சிபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
