ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ் யுவதி ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக எரிந்த நிலையில் இருந்ததால், அடையாளம் காணும் நோக்கில் மரபணு (DNA) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் வெளியாக சுமார் ஐந்து நாட்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஹட்டன் – மஸ்கெலியாவைச் சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி என்ற தமிழ் யுவதியும் அடங்குகிறார். அவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த தொழிற்சாலையில் பணியில் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உயிரிழந்தவர்களில் சிலர் பணியில் இணைந்து சில நாட்கள் அல்லது சில மாதங்களே ஆகியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கும் நடவடிக்கையின் போது, முறையான தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள் இல்லை உள்ளிட்ட பல குறைபாடுகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியிருந்ததாகவும், அவற்றை 20 நாட்களுக்குள் சரிசெய்யுமாறு கடந்த மாதம் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
