பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள 'எல் நினோ' (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் இலங்கைக்கு அருகில் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளதாகவும், அதன் தாக்கம் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தீவிரமடையக்கூடும் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மே முதல் செப்டம்பர் வரை வழக்கமாகவே வறட்சியும் அதிக வெப்பமும் நிலவுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், எல் நினோவுடன் தொடர்புடைய வெப்ப அலை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமார் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஸ்பெயினில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எல் நினோவின் தாக்கத்தை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மிக முக்கியம் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா வலியுறுத்தியுள்ளார்.
