தமிழக அரசியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்த விஜயகாந்தின் மறைவு தமிழக மக்களை மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.. குறிப்பாக, ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் என்பதால், அவரது மறைவு யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் முதல் ஆண்டு நினைவு நாளையொட்டி, யாழ்ப்பாணம் நகரின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் பொருந்திய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நடிகர் மற்றும் அரசியல்வாதி என இரு வேடங்களிலும் சிறந்து விளங்கிய விஜயகாந்த், ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தவராகவும் இருந்தார். இதன் காரணமாகவே, அவர் ஈழத் தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.
தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டியதன் மூலம் ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் மீதான அவரது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு, தனது வாழ்நாளில் தமிழினத்தின் நலனுக்காக பல செயல்களைச் செய்த விஜயகாந்தை, யாழ்ப்பாண மக்கள் இன்றும் மறக்கவில்லை என்பது இந்த சுவரொட்டிகளின் மூலம் தெளிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.