நாட்டின் பொருளாதாரம் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டு பராமரிப்புக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்ற செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பொது நிதியை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டு மகிந்த ராஜபக்ச மீது எழுந்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச வசிக்கும் விஜேராம இல்லத்தின் பராமரிப்புக்காக 2020 முதல் 2024 வரை 430 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில், வீட்டை புதுப்பித்தல், லிப்ட் பொருத்துதல், ஜெனரேட்டர் கொள்வனவு செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக பணம் செலவிடப்பட்டுள்ளது. மேலும், இல்லத்தை பராமரிப்பதற்காக மட்டும் 2023 ஆம் ஆண்டில் 383 லட்சம் ரூபாயும், 2024 ஆம் ஆண்டில் 946,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விஜேராம இல்லம் 35 ஆயிரத்து 334 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வளவு பெரிய வீட்டின் மாத வாடகை 46 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் வசித்த இந்த வீடு பின்னர் ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் அரசாங்க மதிப்பீட்டு மதிப்பு 3127.84 மில்லியன் ரூபாய் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.