யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள கொட்டடி பகுதியில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (15) இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்த கட்சியின் ஆதரவாளர் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (வயது - 28) மற்றும் விஜயராசா செந்தூரன் (வயது - 29) ஆகிய இருவருக்குமே தலை மற்றும் கால் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை, கொட்டடியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், "நீ தானே தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்? கரையோரப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்காக வேலை செய்கிறாய்? உங்கள் இடத்திற்கு வாள்வெட்டுக் குழு வருகிறது; பார்த்துக்கொள்..." என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
அச்சுறுத்தல் விடுத்த சுமார் பத்து நிமிடத்தில், கொட்டடி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்தவர்கள் மீது வாள்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரின் சகோதரர் உட்பட இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இ. சந்திரசேகர் மற்றும் தே. ம. சக்தியின் பா.உ க. இளங்குமரன் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு விடயங்களை ஆராய்ந்து பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.