இன்றைய தினம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகளை விவாதிக்கக் கூடிய ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்த போதிலும் இந்த கூட்டம் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதலால் பெரும் அமளியில் முடிந்துள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், ரஜீவன், அர்ச்சுனா, பவானந்தராஜா, இளங்குமரன் மற்றும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முக்கிய நோக்கம், வடக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை ஆராய்வது. குறிப்பாக, கிராமிய வீதி அபிவிருத்தி, மழை நீர் சேகரிப்பு, குடிநீர், போக்குவரத்து, வீட்டுத்திட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்டன.
எனினும், வலி வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விவகாரம் தொடர்பான விவாதம், நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோரிடையே தனிப்பட்ட மோதலாக மாறியது. அவர்கள் இருவரும் மற்றவரது காதல் விவகாரங்கள், மோசடிகள், பெண்களை ஏமாற்றிய கதைகள் மற்றும் நிதி மோசடிகள் உள்ளிட்ட பல தனிப்பட்ட பிரச்சினைகளை நூற்றுக்கணக்கான அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக விவாதித்தனர்.
இந்த தனிப்பட்ட மோதலைத் தடுத்து நிறுத்த ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் முயன்றபோதும், அவரால் முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
.