ஈரானைத் துண்டாடி எண்ணெய் வளங்களைக் கொள்ளையடிக்கவே அமெரிக்கா சதி: வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் இஸ்மாயில் பாகாயி பகிரங்கக் குற்றச்சாட்டு!
ஈரானின் எண்ணெய் வளங்களைச் சட்டவிரோதமாகக் கொள்ளையடிப்பதற்காகவே, நாட்டைத் துண்டாடும் சதித்திட்டத்துடன் அமெரிக்கா இந்த யுத்தத்தைத் தம்மீது திணித்துள்ளதாக ஈரான் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகாயி (Esmaeil Baghaei) டெஹ்ரானில் இன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த அதிரடிக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எண்ணெய் வளக் கொள்ளையும் இறையாண்மை மீறலும்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், "அமெரிக்காவின் வடிவமைப்பு மற்றும் அவர்களின் உண்மையான நோக்கம் மிகவும் தெளிவானது. ஈரானைப் பல துண்டுகளாகப் பிரித்து, எமது பெறுமதிமிக்க எண்ணெய் வளங்களைச்சட்டவிரோதமாகக் கையகப்படுத்துவதே அவர்களின் பிரதான இலக்காகும். ஈரானின் இறையாண்மையை மீறி, எமது மக்களைத் தோற்கடித்து, மனிதநேயத்தைச் சீர்குலைக்கவே அவர்கள் முற்படுகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா துரோகம்
தற்போதைய தாக்குதல்களுக்கு முன்னதாக அமெரிக்காவுடன் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் முழுவீச்சில் இடம்பெற்று வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும், ஈரான் அந்தப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுடன் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, அமெரிக்கா அதனை முற்றுமுழுதாக நாசமாக்கிவிட்டு (Torpedoed) தமது நாட்டின் மீது அப்பட்டமான போர் தொடுத்துள்ளதாக அவர் கடும் கண்டனம் வெளியிட்டார்.துருக்கி, சைப்ரஸ் மீதான தாக்குதல்கள் ஒரு "சதி நாடகம்"
கடந்த வாரம் துருக்கி, சைப்ரஸ் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக வெளியான செய்திகளை இஸ்மாயில் பாகாயி முற்றாக மறுத்தார். ஈரானிய எல்லைக்குள் இருந்து எந்தவொரு அண்டை நாடுகள் மீதும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்த அவர், ஈரானுக்கும் ஏனைய பிராந்திய நாடுகளுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்காக எதிரிகளால் அரங்கேற்றப்பட்ட "நாடகமாகவே" (Staged attacks) இச்சம்பவங்கள் இருக்கக்கூடும் எனச் சந்தேகம் வெளியிட்டார்.
அண்டை நாடுகளுக்கான எச்சரிக்கையும் தற்காப்பு உரிமையும்
அண்டை நாடுகளுடன் சிநேகபூர்வமான மற்றும் சுமூகமான உறவைப் பேணவே ஈரான் விரும்புவதாக அவர் வலியுறுத்தினார். இருந்தபோதிலும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக எந்தவொரு நாட்டினது நிலப்பரப்போ அல்லது வான்பரப்போ பயன்படுத்தப்பட்டால், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் முழுமையான உரிமை ஈரானுக்கு உண்டு எனவும், அதனை எவரும் விரோதச் செயலாகக் கருத முடியாது எனவும் அவர் இராஜதந்திர ரீதியில் எச்சரிக்கை விடுத்தார்.
"போர் நிறுத்தம் தற்போது சாத்தியமற்றது"
போர் நிறுத்தத்திற்கான மத்தியஸ்த முயற்சிகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பாகாயி, "தற்போதைய இராணுவ மோதல்களுக்கு மத்தியில் போர் நிறுத்தம் குறித்துப் பேசுவது முற்றிலும் அர்த்தமற்றது (Irrelevant). இந்த யுத்தத்தை நாங்கள் தொடங்கவில்லை. இது நாமாகத் தேர்ந்தெடுத்த போர் அல்ல; எங்கள் மீது திணிக்கப்பட்ட கட்டாயப் போர் (War of necessity). எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதைத் தவிர வேறு எந்த சமரசத்திற்கும் தற்போது இடமில்லை" என உறுதியாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேசச் சட்டங்கள் மற்றும் மரபுகள் அனைத்தையும் மீறிச் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
