கடந்த 18 மாத காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மக்களுக்குச் சொந்தமான பெருமளவிலான காணிகள் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.மேலும், எதிர்காலத்தில் விடுவிக்கப்படக்கூடிய மேலதிக காணி அளவுகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை மக்களிடம் ஒப்படைப்பதற்காக தற்போதுள்ள இராணுவ முகாம்களை மறுசீரமைப்பது மற்றும் அவற்றின் அளவைக் குறைப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக் காணிகளை வெறுமனே பெற்றுக்கொள்ள முடியாது எனவும், முறையான வழிமுறையின் ஊடாக இராணுவ முகாம்களை மறுசீரமைப்பதன் மூலமே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.தங்களது அரசாங்கம் வட பகுதி மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த ஒரு அரசாங்கம் என்பதால், வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.500 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களினால் இந்த ஆண்டில் தேர்தலை நடத்துவது கடினம் என்ற போதிலும், வேறு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாவிடின் அடுத்த வருடத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இது தவிர, இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் நிலவும் மிகவும் நெருக்கமான மற்றும் சுமுகமான உறவு காரணமாக, இந்த விவகாரத்தில் இந்தியாவிலிருந்து எவ்வித அழுத்தங்களும் ஏற்படாது என்றும் அவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

