மே 2: "கப்பலைக் கைப்பற்றுவது லாபகரமான தொழில்!"
"விளையாட்டுக்காகச் செய்யவில்லை, சரக்குகளையும் எண்ணெயையும் கைப்பற்றுகிறோம்! - ஃப்ளோரிடா பொதுக்கூட்டத்தில் டிரம்ப் அதிரடிப் பேச்சு!"
ஈரானியத் துறைமுகங்களுக்கு எதிரான கடல் முற்றுகையின் போது அமெரிக்கக் கடற்படை ஒரு கப்பலைக் கைப்பற்றிய ராணுவ நடவடிக்கையை விவரித்த அதிபர் டிரம்ப், அமெரிக்கப் படைகள் "கடல்கொள்ளையர்களைப் போலச் செயல்படுவதாகத்" தெரிவித்துள்ளார்! 


வெள்ளிக்கிழமையன்று ஃப்ளோரிடாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், "நாங்கள் கப்பலின் மீது இறங்கி அதைக் கைப்பற்றினோம். அதிலிருந்த சரக்குகள் மற்றும் எண்ணெயைக் கைப்பற்றினோம். இது மிகவும் லாபகரமான ஒரு தொழில்," என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தினரின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் பேசிய அவர், "நாங்கள் கடல்கொள்ளையர்களைப் போலத் தான் இருக்கிறோம், ஆனால் நாங்கள் எந்த விளையாட்டும் விளையாடவில்லை," என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.
அமெரிக்கக் கடற்படையின் நடவடிக்கையை டிரம்ப் கடல்கொள்ளையர்களுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ள அதே வேளையில், உலகின் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் முடக்கியுள்ளது குறித்தும், அந்த வழியாகச் செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடுவது குறித்தும் சட்ட நிபுணர்கள் தீவிரமான கவலைகளை எழுப்பியுள்ளனர்.
"ஒருபுறம் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்.. மறுபுறம் ஈரானியக் கப்பல்களைக் கைப்பற்றும் அமெரிக்காவின் கடற்படை!" இரண்டு நாடுகளுமே உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக வழியைத் தங்களின் பலப்பரீட்சைக்கான களமாக மாற்றியுள்ளதை இந்தப் பதற்றமான சூழல் காட்டுகிறது! 



