உறக்கத்தில் ஆழ்ந்த சாரதி – 20 பயணிகளுடன் பேருந்து சுவரில் மோதி விபத்து
காலி – கொழும்பு பிரதான வீதியின் தாதல்ல பகுதியில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் படி, பேருந்து சாரதி உறக்கத்தில் ஆழ்ந்ததால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு விலகி அருகிலிருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து பலத்த சேதமடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீண்ட தூரப் பயணங்களில் சாரதிகளின் ஓய்வு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின் அவசியத்தை இந்த விபத்து மீண்டும் நினைவூட்டியுள்ளது.