மண்ணில் புதைக்கப்பட்ட சடலம் – சந்தேகநபர் கைது
கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய – ரங்கல பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 22 வயதுடைய யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய வாசனா சந்தமாலி வீரசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின் படி, யுவதி காணாமல் போனதாக முதலில் முறைப்பாடு செய்த நபர்மீதே பின்னர் சந்தேகம் எழுந்துள்ளது.

சந்தேகநபரின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, யுவதி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் வீட்டிற்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், சுமார் மூன்று அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர் தப்பியோடியிருந்த சந்தேகநபர், மீண்டும் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது அவர் விஷம் அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமணமான சந்தேகநபர், கடந்த நான்கு ஆண்டுகளாக உயிரிழந்த யுவதியுடன் வாழ்ந்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.