முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதைத் தடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, சட்ட மாஅதிபர் இன்று (22) உயர்நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
யோஷித ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கு விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குறித்த கோரிக்கைக்கு அரசு தரப்பு இணங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன், அதற்கான ஆட்சேபனைகளையும் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டு தொடரவுள்ளன.
