பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து சுட்டுவிட்டு தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல்காரர்
கட்டுநாயக்க தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பின்தொடர்ந்து சென்று தேவமொட்டாவ பகுதியில் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லத் தயாரானபோது, ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளை எடுக்கச் சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய சந்தேகநபர், மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தரிடமிருந்த உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு வேறொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சந்தேகநபர் பொலிஸாரின் உத்தியோகபூர்வ துப்பாக்கியுடனேயே தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து சந்தேகநபரை கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
